







சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார்.
பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இங்கு அறிமுகமாகும் பெண்களை விட வடக்கத்திய ஹீரோயின்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
fn
ரத்தி, மாதவியில் ஆரம்பித்து மதுபாலா, பல்லவி, ரூபிணி, மும்தாஜ், ரீமா சென், லைலா, ஜுகி சாவ்லா, நக்மா, ஜோதிகா, கஜோல், மனிஷா கொய்ராலா, மல்லிகா ஷெராவத், சோனியா அகர்வால், காஜல் அகர்வால், குஷ்பு, தபு, இஷா கோபிகர், ராணி முகர்ஜி, ஊர்மிளா, ஷில்பா ஷெட்டி, ஜெனலியா, இலியானா, ஹன்ஸிகா மோத்வானி, சமீபத்திய வரவான சித்தி இத்னானி வரை ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.
இவர்கள் எல்லோருமே தமிழ், மற்றும் தெலுங்கு, கன்னட திரைகளில் குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகளாவது பிசியாக இருந்தவர்கள். இதில் குஷ்புவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டின் மருமகள்களாகவே மாறி சென்னையிலேயே செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாராகி விட்டவர்கள்!
இதில் ஐஸ்வர்யா ராய் மட்டும் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்.
இதே நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21ஆம் வயதில் 1994இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ;இருவர்’ (1997) படத்தில் பிரபல நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பாத்திரத்தில், எம் ஜி ஆராக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
அதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார். கூடவே இந்தி உட்பட பலமொழிப் படங்களிலும் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டது.
2017இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாலும் நடிப்பு ஆர்வம் அவரை விடவில்லை. அது இந்த வருடம் வெளியான மணிரத்னத்தின் ‘பொன்னியில் செல்வன்’ வரை சுமார் 25 வருடங்கள் – அதாவது அவர் திரைக்கு வந்து பொன்விழா ஆண்டாகவே அவரை ஒரு சிறந்த நடிகையாக நீடிக்கச் செய்திருக்கிறது.
பல மொழிகளில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம்தான் தன்னுடைய குரு என்கிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் வாழ்க்கை, கல்கியின் பொன்னியின் செல்வனைப் போலவே ஒரு தொடர்கதை போல நீள்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, துளுதான் தாய்மொழி. ஆனால் மும்பைக்கு குடிபெயர்ந்த அவரது குடும்பத்தால் அங்குள்ள ஆர்யா வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பையும், மட்டுங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரியையும் முடித்திருக்கிறார்.
படித்துக் கொண்டே க்ளாசிக்கல் டான்ஸ், மியூஸிக் என ஐந்து வருடங்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராயின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் 1991-ல் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான். ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வாகி இருக்கிறார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் பிரபலமாகிறது. அடுத்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பார்த்திபன் பார்வையில் ஐஸ்வர்யா
பார்த்திபன் கூறுகையில், “அவர் உலக அழகி மட்டுமல்ல, மிகவும் புத்திசாலிப் பெண்ணும்கூட.. திரையுலகில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நானும் அவரும் பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்த போது “கடைசியாக நீங்கள் இயக்கிய படம் என்ன?” என்று என்னிடம் கேட்டார்.
நான் எனது ‘ஒத்த செரு[ப்பு’ படத்தைப் பற்றி சொல்லி, படம் முழுக்க ஒரே கதாபாத்திரம்தான் என்று சொன்னதும் கண்கள் விரிய தன் வியப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் உடனே தன் கணவர் அபிஷேக் பச்சனுக்கு போன் செய்து ‘நெட்பிளிக்ஸில் அந்தப் படம் இருக்கிறதாம், உடனே பாருங்கள்’ என்றார்.
அவரை பார்க்கச் சொன்னது மட்டுமல்லாமல் அதை ஹிந்தியில் அவரையே ஹீரோவாக வைத்து ரீமேக் (single slipper size 7) செய்யவும் காரணமாக இருந்தார். இன்னும் இரண்டு மாதங்களில் அந்தப் படம் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு ஐந்து நிமிட உரையாடலில் ஒரு சினிமா ப்ராஜெக்ட்டையே சுவிட்ச் ஆன் செய்து விட்டார். இது சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலையும் ஈடுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது” என்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
பொன்னியின் செல்வனில் அவரோடு இணைந்து நடித்த த்ரிஷா, “எனக்கு மிகவும் பிடித்த தோழி ஐஸ். அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால் நான் பயணத்தில் இருப்பதால் இன்று அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டும் உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்” என்கிறார்.
மணிரத்னம் வழங்கிய சான்றிதழ்
“ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார். தன்னம்பிக்கை மிகுந்த அவரைத் தேடி ஒரு நடிகையாக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர் இன்னும் பல வருடங்கள் நடித்துக்கொண்டே இருப்பார்” என்கிறார் பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத வட இந்திய மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
இதை ஆமோதிப்பது போல் இருக்கிறது, இயக்குநர் மணிரத்னத்தின் கருத்து:
” கல்கி எழுதிய ஒரு பிரபலமான தமிழ் நாவலின் மிக முக்கிய பாத்திரம் நந்தினி. பல லட்சம் வாசகர்கள் ஏற்கனவே படித்து அவர்கள் மனதில் பதிந்து போன ஒரு உருவம். அதில் ஒரு வடக்கத்திய நட்சத்திரத்தை நடிக்க வைக்கலாமா என்று என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது.
ஆனாலும் அந்தக் கதையை படமாக்குகிற போது இதுவொரு இந்தியப் படமாகவேதான் பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு ஐஸ்வர்யா பொருத்தமாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. அதனால்தான் அவரை அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். ரசிகர்களும் அந்தப் பாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கூடியிருக்கிறது” என்கிறார் மணிரத்னம் (பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை 2023 ஏப்ரல் 13ல் எதிர்பார்க்கலாம் என்பது கூடுதல் செய்தி!)
நன்றி; பிபிசி தமிழ்